புதுடெல்லி: வங்கிகளிலும் காப்பீட்டு நிறுவனங்களிலும் பணத்தை சேமிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் இவ்வாறு சேமிப்பவர்கள் திடீரென மரணம் அடையும்போது அவர்களுடைய குடும்பத்தாருக்கு இது தெரியாமல் போய்விடுகிறது. மேலும், குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்போது, இந்தத் தொகையை சிலர் மறந்துவிடுகின்றனர்.
ஒருசிலர் காப்பீட்டுத் திட்டத்துக்குத் தொடர்ந்து பணம் செலுத்த முடியாமல் பாதியில் கைவிடும்போது முதிர்வுத் தொகையை இடையிலேயே வாங்க முடியாமல் போகும். இப்படிப்பட்டவர்கள் மரணடையும்போது இத்தொகைக்கு உரிமை கோரப்படுவது இல்லை.
இதனால் ஒரு கட்டத்துக்கு மேல், இவற்றை 'உரிமை கோரப்படாத பணம்' என்று அறிவிக்கின்றனர். பின்னர் அத்தொகை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பு ரூ.50,000 கோடியை நெருங்கி உள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் பகவன் காரத் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

