மதுரை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
"தற்போது தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கிறோம். எங்களது பூர்வீகம் தமிழ்நாடுதான், எங்களது முன்னோர்கள் வணிகரீதியாக இலங்கைக்கு சென்றார்கள், தற்போது அங்கு நிலவும் அரசியல் சூழல் காரணமாக மீண்டும் அகதிகளாக நாங்கள் தமிழகம் திரும்பி விட்டோம், எனவே எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை கடந்த 2019ஆம் ஆண்டு நீதிபதி சுவாமிநாதன் விசாரணை செய்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? அவர்களது மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை நீதிபதி அமர்வு முன் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது "இலங்கையிலிருந்து தமிழகம் வந்த அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்.
"எனவே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது," என்று மத்திய அரசு தெரிவித்ததாக தினத்தந்தி வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.