புதுெடல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கியதிலிருந்து பெகாசஸ், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர்.
சென்ற புதன்கிழமை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குர்ஜீத் அஜாலா, பிரதாபன், ஹிபி ஈடன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை அலுவல் குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் மற்றும் முழக்கவரி எழுதப்பட்ட அட்டைகளை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினர்.
இதைப்போல ஆளுங்கட்சி எம்.பி.க்கள் இருந்த பகுதியை நோக்கியும் அவர்கள் வீசினர்.
இதனால் அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. எனவே அவை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த போராட்டத்தின்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் இல்லை.
இதனால் மறுநாள் அவர் அவையில் தனது வேதனையை வெளியிட்டார்.
"அவையில் நடந்த நிகழ்வுகள் எனக்கு வேதனையை கொடுத்துள்ளன. இத்தகைய சம்பவங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானவை," என்று திரு ஓம் பிர்லா கூறியுள்ளார்.
"நாடாளுமன்ற பாரம்பரியத்துக்கு ஒவ்வாத செயல்கள் மீண்டும் அரங்கேறக்கூடாது என்று கூறிய அவர், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
அப்போது மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்து, "எங்கள் கருத்துகளை அவையில் வெளிப்படுத்த அரசு அனுமதிக்கவில்லை," என குற்றம் சாட்டினார்.
உடனே நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நேற்றைய (புதன்கிழமை) சம்பவத்தைக் குறித்து மட்டும் பேசுமாறு வலியுறுத்தினார்.
இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இது பற்றி பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''கைத்தொலைபேசி ஒட்டுகேட்பு ஒரு தேசத் துரோகம். நாடாளுமன்றம் அமைதியாக நடக்க வேண்டும் என்றால் அது பற்றி இங்கு விவாதிக்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தி, "எதிர்க்கட்சிகள் நாடமாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை. தங்கள் கடமையைத்தான் செய்கின்றன. 'பெகாசஸ்' உளவு விவகாரம், எங்களை பொறுத்தவரை தேசியம், தேசத் துரோகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது," என்று குறிப்பிட்டு உள்ளார்.

