மும்பை: பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா, 45, விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவர் கைது செய்யப்பட்டார் என்று போலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ராஜ்குந்த்ரா ஆபாச காணொளிகளைத் தயாரித்து கைத்தொலைபேசி செயலிகளில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஏராளமாக பணம் சம்பாதித்தாகக் கூறி அவரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் கடந்த 19ஆம் தேதி கைது செய்தனர்.
அவரது போலிஸ் காவல் முடிந்ததை அடுத்து அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பிணை வழங்ககோரி அவர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளு படி செய்துள்ளது.
இதை எதிர்த்து ராஜ்குந்த்ரா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை கைது செய்ய முறையாக அழைப்பாணையோ, கைது ஆணையோ அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதனை மறுத்துள்ள போலிசார், "ராஜ்குந்த்ராவை கைது செய்வதற்கு முன்பு அவருக்கு முறையாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் ஆதாரங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்," என்று கூறினர்.
ஆபாசப் படங்களை தயாரித்து, கைபேசிச் செயலிகளில் வெளியிட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் போலிசார் விசாரணைக்குள் வந்து உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சில பெண்களை, தங்களை இணையத் தொடரில் நடிக்க அழைத்து ஆபாச படத்தில் நடிக்க வைத்து மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில் மும்பை குற்றப்பிரிவு போலிசார் சிலரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் தற்போது இந்த வழக்கில் ராஜ்குந்த்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆபாசப் படம் எடுத்து கைபேசி செயலியில் வெளியிட்டதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஐந்து மாதத்தில் அவர் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்து இருப்பதாக போலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 51 ஆபாசபட காணொளிகள் கைப்பற்றி இருப்பதாகவும் போலிசார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே நடிகை ஷில்பா ஷெட்டி தமக்கு எதிராக அவதூறான கருத்துகள் பரப்பப்படுவதாக சமூக ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மும்பை நீதிபதி திரு பட்டேல், "போலிசார் தகவலை வெளியிடுவது," அவதூறு அல்ல என்றார்.

