டெல்லி போலிஸ் ஆணையராக
ராகேஷ் அஸ்தானா பதவியேற்பு
புதுடெல்லி: டெல்லி ஜெய் சிங் மார்க்கில் உள்ள போலிஸ் தலைமையகத்தில் போலிஸ் ஆணையராக ராகேஷ் அஸ்தானா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இம்மாதம் 31ஆம் தேதியுடன் அவர் ஓய்வுபெற இருந்த நிலையில் அவருக்கு ஒரு வருடம் பணி நீட்டிப்பு அளித்து மத்திய அரசு அவரை பதவியில் அமர்த்தியுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் புதிய போலிஸ் ஆணையர் அதிரடியாகச் செயல்பட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீரின் மூன்று இடங்களில்
பறந்த ஆளில்லா வானூர்தி
ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஆளில்லா வானூர்தி பறந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று சம்பா மாவட்ட போலிஸ் சூப்ரென்டென்டண்ட் ராஜேஷ் சர்மா கூறியுள்ளார்.
இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட கூடும் என உளவு துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
இதனையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோன்று காஷ்மீரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஆளில்லா விமானத்தின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் தெரியவந்து போலிசார் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

