புதுடெல்லி: தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடும் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 விழுக்காடும் இடம் ஒதுக்குவதை இந்த கல்வி ஆண்டே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் "இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இந்தியா முழுவதுமான ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்," என்று திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீண்டகால கோரிக்கையை நிறைவேறியிருப்பதால் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் நலன்கள் மீதான மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரி வித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ''பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கப்போவதை திமுகவின் சட்டரீதியான சமூக நீதிப் போராட்டம் மூலம் உறுதி செய்து சாதனை படைத்திருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட் டத்தின் முதல் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இதனை சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தற்போது மத்திய அரசு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மட்டும் அறிவித்துள்ள போதிலும் வரவேற்கத்தக்கது என்றார்.

