புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை சுமார் 460 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் மட்டும் 5.3 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதியில் இருந்து தடுப்பூசி போடும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
நாடு முழுவதும் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று முன்தினம் வரை நாட்டில் சுமார் 360 மில்லியன் பேருக்கு முதல் தவணையாகவும் சுமார் 100.6 மில்லியன் பேருக்கு இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி உற்பத்தியானது வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்தியாவில் முழுவீச்சில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசியின் முக்கிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.

