மும்பை: ரயில்களில் பயணம் மேற்கொள்ள மும்பைவாசிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிலர் அந்தச் சான்றிதழை 'டி-சட்டை'களில் அச்சடித்து வலம் வரலாம் என்ற யோசனையை வரவேற்றுள்ளனர்.
எதிர்வரும் சுதந்திர தினம் முதல் மும்பை புறநகர் ரயில்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரமாக அதற்குரிய சான்றிதழை பயணச்சீட்டு வாங்கும்போது காண்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்காகவே புதிய கைபேசிச் செயலி ஒன்றையும் மகாராஷ்டிர அரசு அறிமுகம் செய்கிறது.
இதையடுத்து சான்றிதழைக் காட்டுவதற்கு என மாற்று வழிகளையும் சிலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அதில், 'டி-சட்டை'களில் கொரோனா சான்றிதழை முழுமையாக அச்சிடுவதும் ஒன்று.
இளையர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இந்தி நடிகர் அத்துல் கத்ரி இந்த 'டி-சட்டை'யை அணிந்தபடி காட்சியளிக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். சான்றிதழுடன் பிரதமர் மோடியின் படமும் 'டி-சட்டை'யில் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுப்பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை அங்கு புதிதாக 4,505 பேருக்கு கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவில் அன்றாட தொற்று எண்ணிக்கை 3,663ஆக பதிவாகி இருந்தது. அதன் பிறகு நேற்று முன்தினம் பதிவானதே ஆகக் குறைவான எண்ணிக்கையாகும். மும்பையிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 208 என, ஆகக் குறைவாக பதிவானது.
இதேபோல் உயிரிழப்போர் எண்ணிக்கையும் திங்கட்கிழமையன்று குறைவாக இருந்தது. மாநிலத்தில் 63 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். அன்றாடம் பரிசோதிக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை குறைந்ததால்தான் பாதிப்பு அளவும் குறைந்துள்ளது என ஒருதரப்பு சுட்டிக்காட்டி உள்ளது.

