புதுடெல்லி: இனி இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் பல்வேறு காரணங்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் தங்கி உள்ள வெளிநாட்டவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்திய குடிமக்களைப் போலவே வெளிநாட்டினரும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசிக்கு என்றே உருவாக்கி உள்ள 'கோவின்' இணையத்தளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய முடியும்.
இதற்கு தங்களுடைய கடப்பிதழ் எண்ணைப் பயன்படுத்தலாம் என்றும் பரிசீலனைக்குப் பிறகு பதிவு ஏற்கப்படும் பட்சத்தில் அரசு ஏற்பாடு செய்துள்ள மையத்துக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 'கோவேக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி' உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 'கோவின்' இணையத்தளம் மூலமாக அதற்குரிய சான்றிதழையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாடு முழுவதும் இதுவரை 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

