கோவேக்சின், கோவிஷீல்டு கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்குப் பரிந்துரை
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,353 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் 497 பேர் பலியானதாகவும் மத்திய சுகாதாரத்துறை நேற்று தெரிவித்தது.
புதிதாக ஏற்பட்ட தொற்று, முந்தைய 24 மணி நேர பாதிப்பை விட 36% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் புதிதாக 28,204 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக செவ்வாய்க்கிழமை அந்தத்துறை தெரிவித்து இருந்தது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 3.2 கோடி.அன்றாட பாதிப்பு விகிதம் 2.16% ஆக இருப்பதாகவும் இது கடந்த 16 நாட்களாக 3%க்கும் குறைவாகவே இருந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 429,179 ஆகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,013 பேர் குணமடைந்தனர்.
குணமடையும் விகிதம் 97.45% ஆக உள்ளது. மொத்தம் 51.9 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை கூறியது.
இதனிடையே, கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளைச் சேர்த்து பயன்படுத்தலாமா என்பதைக் கண்டறிய அனுமதி வழங்கலாம் என்று இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இரு வகையான கொரோனா தடுப்பூசிகளை ஒருவர் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் என அண்மையில் அறிக்கை வெளி யிடப்பட்டது. அதையடுத்து இந்தப் பரிந்துரை இடம்பெற்றுள்ளது.
இவ்வேளையில், தென் மாநிலமான கேரளாவில் இந்த மாதம் முதல் தேதியில் இருந்து 20ஆம் தேதிக்குள் ஏறத்தாழ 4.6 லட்சம் பேர் தொற்று காரணமாக பாதிக்கப் படும் வாய்ப்புள்ளதாக அந்த மாநிலத்தின் எட்டு மாவட்டங்களுக்கு அண்மையில் சென்றுவந்த மத்திய வல்லுநர்கள் குழு தெரிவித்தது.

