புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரண்டு நாட்கள் முன்னதாகவே நேற்று முடித்துக்கொள்ளப்பட்டது.
இதனிடையே, மாநிலங்களவை தலைவரான வெங்கய்யா நாயுடு நேற்று அழுது கொண்டே அவையில் பேசினார். மாண்பைக் காக்க உறுப்பினர்கள் தவறிவிட்டதாக கண்ணீர் மல்க அவர் கூறினார்.
அப்போதும்கூட எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் மேசை மீது ஏறி ஆடிப்பாடி அமளியில் ஈடுபட்டதால் அவரின் பேச்சைக் கேட்க முடியவில்லை. ஜூலை 19ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால் மழைக்கால கூட்டத்தொடரே முடங்கிப்போனது. அவை கூடுவதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது.
அமளி ரகளைகளுக்கு மத்தி யிலும் பல்வேறு மசோதாக்களை அரசு நிறைவேற்றியது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை முடிவு செய்யும் அதிகாரத்தை மீண்டும் மாநிலங்களுக்கே அளிக்கும் மசோதா மட்டுமே எதிர்க்கட்சி களின் ஆதரவுடன் நிறைவேறியது.

