மத்திய அமைச்சர்கள்: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாட்டால் நாட்டுக்கு அவமானம்
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை ஒத்தி வைத்து மத்திய அரசு சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மழைக்கால கூட்டத்தொடரை மத்திய அரசு வேண்டுமென்றே திசை திருப்பியதாகவும் அவை குற்றம்சாட்டி உள்ளன.
டெல்லியில் நேற்று 12 எதிர்க் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் காங்கிரஸ் எம்பி ராகுல். அதன் பின்னர் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் போன்ற முக்கியமான தேசிய பிரச்சினைகளை விவாதிக்கும்படி எதிர்க்கட்சிகள் ஒருமனதாக தெரிவித்த போதிலும், மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்களைக் கையாள்வதற்காக நாடாளுமன்ற பாதுகாப்பிற்கு என வெளியாட்கள் அழைத்து வரப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சில எம்பிக்கள் தாக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட விதத்துக்காக எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
"நாட்டு மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு வழங்கி உள்ளனர். ஆனால், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எப்படி எதிர்க்கட்சிகள் முற்றிலும் சீர்குலைக்கின்றன என்பதை நாம் அனைவரும் பார்த்தோம்.
"எதிர்க்கட்சிகள் இப்போது முதலைக் கண்ணீர் வடிப்பதற்குப் பதிலாக, அவமானத்தை உணர்ந்து, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க முன்வர வேண்டும்," என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.
எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமற்ற செயல் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சில எம்பிக்கள் கதவுகளை உடைத்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை பாதுகாவலர்களுடன் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். ஒரு பெண் பாதுகாவலரை காயப்படுத்தினர், இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்பாடு. அவர்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளனர்," என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.
வெங்கையா, எதிர்க்கட்சியினர் சந்திப்பு
புதுடெல்லி: நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலங்களவை தலைவரும் துணை அதிபருமான வெங்கையா நாயுடுவை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது மாநிலங்களவையில் நடந்த சம்பவங்கள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தனர்.
அண்மையில் மாநிலங்களவையில் நிகழ்ந்த சம்பவங்களால் மிகவும் வேதனை அடைந்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, தனது வேதனையை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும் கண்ணீருடன் கூறினார். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் துணை அதிபர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியது குறித்தும் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

