திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அங்கு தற்போது நாள்தோறும் 18,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். வயநாட்டில் 651,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, தற்போது 616,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
அத்துடன், பிற நோயுடன் படுக்கையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வரும் 636 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றும் இதனால் விரைவில் தொற்று கட்டுப்படுத்தப்படும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

