புதுடெல்லி: சாதி, மதம், மொழி, நாடு என்று எந்த ஒரு வேறுபாடும் இன்றி மக்கள் அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளதால் உலக பொதுமறை என்று அழைக்கப்படுகிறது திருக்குறள்.
இந்தத் திருக்குறளின் மொழி பெயர்ப்புகள் நரிக்குறவா் இன மக்கள் பேசும் 'வாக்ரிபோலி' மொழி உள்பட பத்து மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் அக்டோபா் மாதத்தில் மலையாளம், மராத்தி, ஒடியா, ஹிந்தி, நேபாளி, உருது, அரபி, பாரசீகம், வாக்ரிபோலி, படுகு ஆகிய 10 மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகள் வெளியிடப்படவுள்ளதாகவும் இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் இரா.சந்திரசேகரன் அறிக்கை வெளி யிட்டுள்ளார்.
அதில், "மத்திய கல்வி அமைச்சு திருக்குறளை 21 மொழிகளில் மொழிபெயா்க்கும் திட்டத்தைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
"இந்த நிறுவனம், ஏற்கெனவே பஞ்சாபி (2012), மணிப்புரி (2012), தெலுங்கு (2014), கன்னடம் (2014), குஜராத்தி (2015) ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகளை வெளியிட்டுள்ளது.
"அத்துடன், திருக்குறளின் ஆங்கில மொழிபெயா்ப்பு தொகுப்பு களையும் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளது.
"இதன் தொடா்ச்சியாக வரும் அக்டோபா் மாதம் மலையாளம், மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகள் வெளியிடப்படவுள்ளன.
"இதுதவிர மொழிபெயா்ப்புத் திட்டத்தின் மூலமாகவும் குறுந்திட்ட ஆய்வுகள் மூலமாகவும் கிடைக்கப் பெற்றுள்ள ஆய்வுகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் நூலாக்கம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் உ.வே.சாமிநாதையா் நாட்குறிப்பு, உ.வே.சாமிநாதையா் அருஞ்சொல் அகராதி, சங்கநூல் சொல்லடை, நற்றிணை (கன்னட மொழிபெயா்ப்பு), தொல்காப்பியம் (ஹிந்தி மொழிபெயா்ப்பு), பதிற்றுப்பத்து (கன்னட மொழிபெயா்ப்பு) ஆகியவை உள்ளிட்ட 20 நூல்கள் வரும் செப்டம்பா் மாதம் வெளியிடப்படவுள்ளன," என தெரிவித்துள்ளாா்.

