பெலகாவி: சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள ஆசைப்படுவோர் 500 ரூபாய் (S$9.15) மட்டும் செலவழித்தால் போதும், தங்களின் ஆவலைத் தீர்த்துக்கொள்ளலாம்.
அதற்காக, அவர்கள் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடத் தேவை இல்லை, நீதிமன்றத்தின் படியேறவும் வேண்டாம்.
குளுகுளு மலைவாழிடங்களுக்குச் செல்வதைப்போல, சிறைக்கும் சுற்றுலா செல்லும் வகையில் 'கைதியைப்போல் ஒரு நாள்' திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது கர்நாடக மாநிலம், பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலை.
அதே நேரத்தில், சிறைக்குச் சுற்றுலா வருவோரும் மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுவர் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிச் சீருடை, கைதி எண், கைதிகள் உண்ணும் உணவு, அறைகளைப் பகிர்ந்துகொள்வது, கைதிகளைப்போல தோட்ட வேலை, சமையல், துப்புரவு என்று 24 மணி நேரத்திற்கு அவர்களும் கைதிகளைப் போலவே நடத்தப்படுவர்.
"சிறைச்சாலைக்குச் சுற்றுலா வருவோரை காலை 5 மணிக்கு சிறைக்காவலர்கள் எழுப்பிவிடுவர். எழுந்ததும் தங்களது அறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் தேநீரும் அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவும் தரப்படும். முற்பகல் 11 மணிக்கு சோறும் சாம்பாரும் இரவு 7 மணிக்கு இரவு உணவும் வழங்கப்படும்," என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலை முடிந்தபின் சுற்றுப்பயணிகளுக்குப் பாய் தரப்படும். அவர்கள் மற்ற கைதிகளுடன் தரையில் பாயை விரித்துப் படுக்க வேண்டும். அவர்களும் மற்ற கைதிகளைப்போல் அறைகளுக்குள் தள்ளப்பட்டு பூட்டப்படலாம்.
அரசாங்கத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதால் இன்னும் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

