புதுடெல்லி: தம் மனைவி சுனந்தா புஷ்கரின் மரண வழக்கு தொடர்பான எல்லாக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014 ஜனவரி 17ஆம் தேதி டெல்லியிலுள்ள ஒரு ஹோட்டலில் சுனந்தா மாண்டுகிடந்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதன்மையானவராக சசி தரூரை டெல்லி போலிஸ் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், மெய்நிகர் முறையில் நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது, டெல்லி உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல், குற்றச்சாட்டுகளில் இருந்து சசி தரூரை விடுவித்தார்.
இதனையடுத்து, கடந்த ஏழரை ஆண்டுகளாகக் கடும் சித்திரவதையை அனுபவித்து வந்ததாகவும் இப்போது பெரும் நிம்மதி அடைந்துள்ளதாகவும் கூறிய சசி தரூர், தீர்ப்பளித்த நீதிபதிக்கும் நன்றி கூறினார்.

