புதுடெல்லி: இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் போலி கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 486 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கும் இந்திய சீரம் நிறுவனம் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை விநியோகித்து உள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் உகாண்டா நாட்டிலும் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நோயாளிகள் மட்டத்தில் இந்தப் போலி தடுப்பூசிகளின் பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உலக சுகாதார அமைப்பு, இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.
தடுப்பூசிகளுக்கென உள்ள தனி அடையாளம், அவற்றின் கலவை அளவுகள் ஆகியவற்றை வைத்து அவை அசலா, போலியா எனக் கண்டறிகிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் உகாண்டாவிலும் போலி தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உலகளாவிய பொது சுகாதாரத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின்போது கைப்பற்றிய தடுப்பூசிகளைப் பரிசோதித்தபோது அவை போலியானவை எனத் தெரியவந்தது.
பின்னர் அவை சீரம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அதையடுத்து அந்நிறுவனமும் அவை போலியானவை என உறுதி செய்தது.
இந்நிலையில், போலி தடுப்பூசிகளால் பாதிக்கப்படக்கூடிய மக்கள், சுகாதார அமைப்பின்மீது கூடுதல் சுமை ஏற்படும் என்றும், போலி தயாரிப்புகளை புழக்கத்தில் இருந்து கண்டறிந்து அகற்றுவது முக்கியம் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

