புதுடெல்லி: குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவரை துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
இருவரும் 'ரதி' என்ற குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என போலிசார் தெரிவித்தனர்.
கௌஷல் என்ற மற்றொரு குண்டர் கும்பலைச் சேர்ந்தவரை கொலை செய்வதற்காக இருவரும் காத்திருந்த வேளையில் போலிசார் சுற்றி வளைத்தனர்.
நேற்று காலை டெல்லியின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான துவாரகாவில், 'ரதி' குண்டர் கும்பலைச் சேர்ந்த கரண், ஸீனத் ஆகிய இருவரும் காத்திருந்தனர். இது குறித்து போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலிசார் அங்கு சென்ற போது கரணும் ஸீனத்தும் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலிசாரும் திருப்பிச் சுட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த மோதலின் முடிவில் இரு ரவுடிகளும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரதி என்ற குண்டர் கும்பலின் தலைவன் தற்போது குற்ற வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் அவனது உத்தரவின் பேரில் எதிரி கும்பலைச் சேர்ந்த கௌஷலை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

