புதுடெல்லி: "அழிவு மற்றும் பயங்கரவாத சக்திகள் சில காலத்துக்கு மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால் ஒருபோதும் நிரந்தரமாக முடியாது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான் படை கைப்பற்றி உள்ள வேளையில் திரு மோடியின் கருத்து வெளியாகியுள்ளது.
"அழிவுக்குப் பாடுபடும் படைகளும் பயங்கரவாதம் மூலம் பேரரசுகளை உருவாக்கும் சித்தாந்தங்களும் சில காலத்துக்கு ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் மனித குலத்தை அவற்றால் ஒடுக்க முடியாது. இதனால் அவை நிரந்தர மாக நீடிக்க முடியாது," என்று அவர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை காணொளி மூலம் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
"சோம்நாத் கோயில் நூற்றாண்டுகளில் பல முறை தாக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் மீண்டும் எழுச்சி அடைந்துள்ளது. நம்பிக்கையை பயங்கரவாதத்தால் அழிக்க முடியாது," என்று திரு மோடி குறிப் பிட்டார்.
குஜராத் மாநிலம் சோம்நாத்தில் ரூ 3.5 கோடி மொத்த மதிப்பீட்டில் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையால் பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் சீரமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிக இடவசதியுடன் பழைய கோயில் வளாகமும் புனரமைக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக மற்றும் பாரம்பரிய தலங்களுக்கு புத்தாக்கம் அளிப்பதற்கான பிரசாத் திட்டத்தின்கீழ் ரூ47 கோடி மதிப்பீட்டில் சோம்நாத் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது என்று 'தி இந்து திசை' வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
சுற்றுலா மற்றும் பயணத்துறை போட்டித்திறன் குறியீட்டில் 2013ல் 65வது இடத்தில் இருந்த இந்தியா, 2019ல் 34க்கு முன்னேறியிருப்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, ஆன்மிக சுற்றுலா மூலம் இளையர் களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் என்றார்.
"நமது நாட்டில் ஆன்மிக சுற்றுலாவை நாம் வலுப்படுத்த வேண்டும். இது இளையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும்.
"அதுமட்டுமின்றி இளைஞர்கள் நமது கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறுவார்கள். நம்பிக்கையை பயத்தினால் ஒடுக்க முடியாது. கடந்த காலத்திலிருந்து நாம் இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
நமது புதிய இந்தியாவின் வலுவான தூணாக ராமர் கோயில் உருவாக்கப்படுவதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
இதே நிகழ்ச்சியில் பார்வதி கோயிலுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

