ராஜீவ் காந்தி பிறந்த நாள்;
மலர் தூவி ராகுல் மரியாதை
புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்தநாள் விழாவை நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். அவரது சிலை மற்றும் படத்துக்கு மலர்தூவி அவர்கள் மரியாதை செய்தனர்.
டெல்லி வீர்பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரது மகனும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் தலைவர்கள் பலரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில், "நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
அமித் ஷா-யோகி ஆதித்யநாத்
தேர்தல் ஆலோசனை
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் வியாழக்கிழமை இருவரும் சந்தித்தனர். அப்போது பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவும் உடன் இருந்தார்.
மகாராஷ்டிரா லாரி
விபத்தில் 12 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
துசார்பிட் கிராமம் அருகே நாக்பூர்-மும்பை சம்ருத்தி விரைவுச்சாலை திட்டத்தில் வேலை செய்வதற்காக 15 ஊழியர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லாரி தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் 12 பேரும் பரிதாபமாக மாண்டனர்.

