பெங்களூரு: மன்னர் குறித்து அவதூறான கருத்துகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதற்காக சவூதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்ட பெங்களூரு நபர் இருபது மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பியுள்ளார்.
பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த ஹரிஷ் பெங்கெராவை அவரது மனைவி சுமனா, மகள் ஹனிஷ்கா மற்றும் நண்பர்கள் வரவேற்றனர். பின்னர் அனைவரும் உடுப்பியில் உள்ள குந்தப்பூருக்குச் சென்றனர்.
ஆசிரியையாக பணிபுரியும் அவரது மனைவி சுமனா, தனது கணவர் நாடு திரும்புவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தனது கணவர் சவூதி அரேபியாவுக்கு மீண்டும் செல்ல மாட்டார் என்று அவர் சொன்னார்.
சவூதி அரேபியாவில் ஹரிஷ் ஆறு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரை அவமதிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவுகளை வெளியிட்டதற்காக கடந்த 2019 டிசம்பர் 20ஆம் தேதி ஹரிஷ் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் அந்தப் பதிவுகளை வெளியிடவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உடுப்பி போலிசார் கடந்த ஆண்டு ஹரிஷ்ஷின் ஃபேஸ்புக் கணக்கை ஊடுருவிய இருவரை கைது செய்து குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். இந்த விசாரணையை சுட்டிக் காட்டி ஹரிஷ்ஷின் குடும்பத்தார் அவரை சிறையிலிருந்து மீட்டுள்ளனர்.

