புதுடெல்லி: 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி அடுத்த மாத மத்தியில் விநியோகிக்கப்படும் என அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதல் தடுப்பூசியாக 'ஸைகோவ்-டி' (ZyCoV-D) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இயங்கி வரும் ஸைடஸ் கேடிலா என்ற நிறுவனம் இந்தப் புதிய தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது. முன்னதாக இந்தத் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து 'ஸைகோவ்-டி' தடுப்பூசி விநியோகம் எப்போது தொடங்கும் என அதன் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சார்வில் படேல் விளக்கம் அளித்துள்ளார்.
தடுப்பூசியின் விநியோக முறை, விலை நிர்ணயம் தொடர்பாக மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் விவாதிக்க இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த மாத மத்தியில் இருந்து இறுதிக்குள் விநியோகத்தை தொடங்கிவிட முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
"எதிர்வரும் அக்டோபர் மாதத்துக்குள் பத்து மில்லியன் தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"ஜனவரி இறுதிக்குள் நாற்பது முதல் ஐம்பது மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் சார்வில் படேல்.
மூன்றாவது ஊசி தேவையா?
இதற்கிடையே இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் ஊசி போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநரான மருத்துவர் ரன்தீப் குலேரியா, இந்தியாவிடம் இது தொடர்பாக போதுமான தரவுகள் இல்லை என்றார். தரவுகள் கிடைத்த பின்னர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது ஊசி குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய நிலவரம்:
இதற்கிடையே நேற்று முன்தினம் நாடு முழுவதும் புதிதாக மேலும் 30,948 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 403 பேர் பலியாகிவிட்டனர். இதனால், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 434,367ஆக கூடியுள்ளது.
தற்போது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 353,398 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 97.57%ஆக அதிகரித்த நிலையில், உயிரிழப்போர் விகிதம் 1.34%ஆக குறைந்துள்ளது.
கேரளா நிலவரம்
அண்மைய சில தினங்களாக கேரளாவில் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த அன்றாட பாதிப்பு நேற்று முன்தினம் சற்றே குறைந்தது. அன்று புதிதாக 17,106 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது.
ஐந்து நாள்களுக்குப் பிறகு புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவானது.
ஓணம் பண்டிகை வேளையில் இது அம்மாநில மக்களுக்கு சற்றே ஆறுதல் அளித்துள்ளது.
டெல்லி நிலவரம்
டெல்லியில் தற்போது இரட்டை இலக்கங்களில்தான் புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின்றன. நேற்று முன்தினம் 19 பேருக்கு புதிதாக கிருமி தொற்றிய நிலையில், அங்கு கடைகள் இயங்க விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்துக் கடைகளையும் இரவு பத்து மணிக்கு மேலாக திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

