பெங்களூரு: துணை அதிபர் வெங்கையா நாயுடு பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார்.
"நாம் எப்போதும் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதனால் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாய்மொழியில் பேச நான் அனுமதிக்கிறேன். தாய்மொழியில் பேசும்போது நாம் சொல்ல வரும் விஷயத்தை முழுமையாகப் புரியும்படி சொல்ல முடியும். ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். எந்த மொழியாக இருந்தாலும் சரி, தாய்மொழி அவ்வளவு அருமையானது.
"மத்திய அரசு இப்போது பொறியியல் கல்லூரிகளில் தாய்மொழி வழி கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதனால் தாய்மொழி வளரும். நான் எங்கு சென்றாலும் தாய்மொழியில் பேசவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன்," என்றார் திரு வெங்கையா நாயுடு.
துணை அதிபர் வெங்கையா நாயுடு பத்து நாள் சுற்றுப்பயணமாக கடந்த 16ஆம் தேதி கர்நாடக மாநிலத்திற்கு வருகை மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.
இந்தப் பயணத்தின்போது விஜயநகர மாவட்டத்தின் ஹம்பிநகரில் உள்ள பாரம்பரிய பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னத்தை குடும்பத்துடன் பார்வையிட்டார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல் பாடிய சிறுமியை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருடன் பேசப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு பற்றி பேசிய திரு வெங்கையா நாயுடு, "அவைத் தலைவர் பீடத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிக்க வேண்டும். பதினாறு நாட்கள் நாடாளுமன்றம் நடைபெற்றது. அந்த 16 நாட்களும் அவை முடக்கப்பட்டது. கேள்வி நேரத்திற்குக் கூட வாய்ப்பு வழங்கவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
"அவையில் எல்லா உறுப்பினர்களும் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது இல்லை. பத்து விழுக்காட்டினர் மட்டுமே தரம் தாழ்ந்து நடந்துகொள்கின்றனர். நாடாளுமன்ற அவையில் ஆரோக்கியமான முறையில் விவாதங்கள் நடைபெற வழிகாண வேண்டும். அதற்கு திறமை படைத்தவர்கள் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களாக வரவேண்டும்.
"அண்மைய காலமாக சாதி, பணம், குற்றப்பின்னணி கொண்டவர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும்," என்று வெங்கையா நாயுடு எச்சரித்தார்.
"ஆளும் கட்சியினர் பல திட்டங்களை முன்மொழிய வேண்டும். எதிர்த்தரப்பினர் அதுபற்றி தங்களின் கருத்துகளைக் கூறவேண்டும். அதுகுறித்து அவை முடிவு எடுக்க வேண்டும். இதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைத்தால்தான் இது சாத்தியமாகும்," என்றார் வெங்கையா நாயுடு.
"மேகதாது, காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட விவாதிக்க வேண்டிய, தீர்வுகாண வேண்டிய எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் தீர்வுகாண்பது குறித்துத்தான் அவையில் விவாதங்கள் நடைபெறவேண்டும்.
"அரசியல் கட்சிகள் தங்களின் உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். அதுகுறித்து ஒரு பிரமாணப் பத்திரத்தை அரசியல் கட்சிகள், மக்கள் முன் வெளியிட வேண்டும்," என்று வெங்கையா கேட்டுக் கொண்டார்.
தனது பத்து நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லி திரும்பிய வெங்கையா நாயுடுவை முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலோட்டும் கெம்பெகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று வழியனுப்பி வைத்தனர்.

