புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான நிதிமோசடி, குற்றவியல் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் உச்சநீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் விஜய் அன்சாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அன்சாரியா தாக்கல் செய்த அறிக்கையில், "எம்பி.க்கள் 51 பேர் மற்றும் எம்எல்ஏ.க்கள் உட்பட 112 பேர் மீதான நிதி மோசடி வழக்குகளை அமலாக்கத் துறையும், 121 முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகளை சிபிஐ.யும் விசாரிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான நிதி மோசடி குறித்த 28 வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 10 வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில் உள்ளன. இந்த வழக்குகளை குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து விசாரணையைத் துரிதப்படுத்தலாம்," என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும். வழக்குகள் நிலுவைக்கான காரணம் ஆராயப்படும் என்றும் கூறிய தலைமை நீதிபதி ரமணா, இந்த சுணக்கம் நீதிமன்றத்தாலா அல்லது வழக்கில் தொடர்புள்ளவர்கள் ஏற்படுத்துவதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.