மும்பை: மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே குறித்து மத்திய அமைச்சர் நாராயண் ரானே (படம்) சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்.
பா.ஜ.க. சார்பில் ராய்காட்டில் நடந்த பேரணியில் அவர் பேசும்போது, "ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சருக்கு (உத்தவ் தாக்கரே) எந்த ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றது என்பதுகூட தெரியாமல் இருப்பது வெட்கக்கேடான விஷயம்.
அவர் சுதந்திர தின விழாவில் உரையாற்றும்போது, நாடு சுதந்திரம் அடைந்த ஆண்டு எது என்று உதவியாளரிடம் கேட்டார். அந்த இடத்தில் நான் இருந்தால் அவருக்குப் பலமான அறை கொடுத்திருப்பேன்," என்றார்.
அவரது பேச்சுக்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது சிவசேனா கட்சி, நாசிக் நகர போலிசில் புகார் அளித்தது. இதன் பேரில் அவர் போலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அதோடு வருகிற 30 மற்றும் செப்டம்பர் 13ஆம் தேதிகளில் ராய்காட் மாவட்ட போலிஸ் கண்காணிப்பு அலுவலகத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாஜக - சிவசேனா தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் பிணையில் விடுதலையான நாராயண் ரானே, செப்டம்பர் 2ஆம் தேதி 12 மணியளவில் நாசிக் போலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்று காவல்துறை அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சராக நாராயண் ரானே பொறுப்பு வகித்து வருகிறார்.

