பாலியல் வன்கொடுமை: முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டு சிறை
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் தேசிய பழங்குடியினர் விடுதலைக் கழகம் என்ற அரசியல் அமைப்பை நடத்தி வருபவர் ஜூலியஸ் டார்பாங். இவர் மீது 2007ஆம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஜூலியஸ் டார்பாங்கை கைது செய்தனர். இந்த வழக்கு மேகாலயா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எப்.எஸ்.சங்மா, குற்றவாளி ஜூலியஸ் டார்பாங்குக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இவர் மீது பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்கப்பட்ட பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜூலியஸ் டார்பாங் போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா: 2022 டிசம்பர் வரை
வீட்டிலிருந்து வேலை
பெங்களூரு: கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதித்துள்ளன. தொற்று மூன்றாவது அலையை எதிர்கொள்வது குறித்து நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. 60 விழுக்காட்டு நிறுவனங்கள் 50 விழுக்காட்டுக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டு இயங்குகின்றன. இந்த நிலையில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அரசு சார்பில் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை 50 விழுக்காட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆப்கானில் இருந்து டெல்லி
வந்திறங்கிய 16 பேருக்கு தொற்று
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த 78 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்கானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
காபூலில் சிக்கியிருந்த 25 இந்தியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் என 78 பேரை மீட்டு, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானத்தில் கடந்த திங்கட்கிழமை தஜகிஸ்தானின் துஷான்பே நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஏர் இந்தியா விமானத்தில் நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், 78 பேரில் 16 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விமானத்தில் வந்த மற்றவர்களும் 14 நாட்கள் தங்களை கண்காணிப்பில் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்தியா 228 இந்தியர்கள் உட்பட 626 பேரை காபூலில் இருந்து மீட்டு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இ-விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வரமுடியும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேகதாது அணை விவகாரம்:
கர்நாடக முதல்வர் டெல்லி பயணம்
பெங்களூரு: மேகதாது அணை தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்கிறது. அதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. டெல்லியில் அவர், மேலும் மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாகவும் பாஜக தலைவர்களிடம் ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.

