மூன்று மாதங்களுக்குப் பின் தொற்றுப்பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு அம்மாநிலத்தில் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்து பதிவானது.
நேற்று முன்தினம் 31,445 பேருக்கு புதிதாக கிருமி தொற்றிஉள்ளதை கேரள சுகாதாரத்துறை உறுதி செய்தது. இதன் மூலம் நாட்டில் பதிவான மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 68% கேரளாவின் பங்களிப்பாக உள்ளது.
கடந்த திங்களன்று கேரளாவில் 13,383 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிப்பு குறைந்து வருவதாகக் கருதப்பட்ட நிலையில், உயிரிழப்போர் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 215 பேர் பலியாகிவிட்டனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் கூடியுள்ளது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், அடுத்த நான்கு வாரங்களுக்கு மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கவனக்குறைவாக அல்லது அலட்சியமாக இருந்தால் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்திய நிலவரம்
இதற்கிடையே இந்தியாவில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,164ஆக அதிகரித்துள்ளது. இரண்டு நாள்களில் மட்டும் அன்றாடம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20 ஆயிரம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 607 பேர் பலியாகிவிட்டனர்.
தற்போது 333,725 பேருக்கு கிருமித்தொற்றுப் பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாநில நிலவரம்
மகாராஷ்டிராவில் புதிதாக 5,031 பேருக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து நாள்களுக்குப் பிறகு அன்றாட பாதிப்பு மீண்டும் 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் 26 பேர் பலியாகிவிட்டனர்.
கர்நாடகாவில் கொரோனா மூன்றாவது அலை துவங்கிவிட்டதாக வெளிவந்த தகவல் உண்மையல்ல என பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெங்களூருவில் தொற்றுப்பரவல் கவலை அளிக்கும் வகையில் இல்லை என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
டெல்லியில் இரட்டை இலக்கங்களில் மட்டுமே அன்றாட பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது என்றும் ஆந்திராவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

