புதுடெல்லி: எத்தகைய தீவிரவாத சவால்களையும் எதிர்கொள்ள இந்திய ராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஓன்றில் பேசிய அவர், ஆப்கானிஸ்தானை தலிபான் படைகள் இவ்வளவு விரைவாகக் கைப்பற்றும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.
தலிபான்கள் ஆப்கானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இரண்டு மாதங்களாவது ஆகும் என கருதியதாகவும் இப்போதுள்ள நிலைமை இந்தியாவுக்கு கவலை அளித்துள்ளது என்றும் பிபின் ராவத் கூறினார்.
"ஆப்கானிஸ்தானில் ஊடுருவியுள்ள பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கவலை மத்திய அரசுக்கு உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும் செயல்படுவோம். நமது பாதுகாப்பு தொடர்பில் அங்கிருந்து வரும் எத்தகைய சவால்களையும் சமாளிக்கத் தயாராக உள்ளோம்," என்று முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சூளுரைத்தார்.
பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது தொடர்பான உளவு தகவல்களை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

