அமராவதி: சொத்துக்குவிப்பு வழக்கில் பிணை கிடைக்காவிட்டால் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிறைக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன்மோகன் ரெட்டி, அவரது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பியான விஜய்சாய் ரெட்டி ஆகிய இருவர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி முதல் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பிணை பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, கடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆந்திர முதல்வராகப் பதவி வகித்து வருகிறார் ஜெகன்மோகன்.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட இருவரது பிணையையும் ரத்து செய்ய வலியுறுத்தி ஜெகன்மோகனின் கட்சியைச் சேர்ந்த ரகுராம் கிருஷ்ணம்ம ராஜு என்பவர் சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் சாடியுள்ளனர்.
ஜெகன்மோகன், விஜய்சாய் ஆகிய இருவரும் பிணை நிபந்தனைகளை மீறுகின்றனர் என்றும் சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கின்றனர் என்றும் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார் ரகுராம்.
இந்த வழக்கில் செப்டம்பர் 15ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை தீர்ப்பு ஜெகன்மோகனுக்கு எதிராக அமைந்தால் அவர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதையடுத்து ஆந்திராவின் அடுத்த முதல்வர் யார் எனும் கேள்வி எழுந்துள்ளது. ஜெகன்மோகன் மனைவி பார்வதியை ஒரு தரப்பினர் முன்னிறுத்தி வருகின்றனர். மூத்த தலைவர்கள் சிலரது பெயர்களும் அடிபடுகின்றன.
இதற்கிடையே, இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக ஆந்திரா முழுவதும் சூதாட்டம் நடைபெறுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

