11,000 விசாக்கள் செல்லாதென அறிவிப்பு; குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம்
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் வழங்கிய 11 ஆயிரம் விசாக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் தேதி வரை வழங்கப்பட்ட விசாக்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தூதரக அதிகாரி தெரிவித்தார் என ஏஎன்ஐ செய்தி முகமை கூறியுள்ளது.
முன்னதாக இந்திய தூதரகம் வழங்கிய சுமார் ஆயிரம் விசாக்கள் திருடுபோனதாகவும் அதன் பிறகுதான் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு 'இ-விசா' எனப்படும் மின்னிலக்க விசா பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வருவதற்கு முன்னர் இந்திய தூதரகம் மூன்று தினங்களில் சுமார் 11 ஆயிரம் விசாக்களை அளித்திருந்தது.
இதுவரை ஆப்கான் குடிமக்களுக்கு முந்நூறுக்கும் மேற்பட்ட 'இ-விசா'க்கள் அளிக்கப்பட்டுள்ளது. திருடுபோன விசாக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படலாம் என இந்திய உளவுப் பிரிவுகள் எச்சரித்ததை அடுத்து உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தலிபான்கள் காபூல் நகரைக் கைப்பற்ற முன்னேறி வருவதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்திய விசாவுக்காக விண்ணப்பித்த ஆப்கானிஸ்தான் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு துணை நின்றவர்களுக்கும் தலிபான்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகக் கூடியவர்களுக்கும் விசா அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி வரும் இவ்வேளையில் அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியர்களை மீட்பதே அரசின் முதன்மை பணியாக இருக்கும் என்றார் அவர்.
டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவின் முன்னுரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அந்நாட்டு மக்களுக்கு இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காபூல் விமான நிலைய பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.