காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
"எல்லாரையும் மீட்டு, வெளியேற்ற இயலவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்," என்று பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் பென் வாலஸ் கூறினார்.
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பேரன் ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்டு வந்த வெளியேற்றச் செயல்பாட்டு வசதிகள் மூடப்பட்டுவிட்டன.
அந்த விமான நிலையத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கா, இம்மாதம் 31ஆம் தேதியுடன் அங்கிருந்து தனது படைகளை மீட்டுக்கொள்ள இருக்கிறது.
அவ்விமான நிலையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட நாடுகள் அங்கிருந்து மக்களை மீட்டு, வெளியேற்றும் பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
இந்நிலையில், விமான நிலையத்தில் எஞ்சியுள்ள கிட்டத்தட்ட 1,000 பேரை மீட்க எட்டு, ஒன்பது விமானங்கள் இயக்கப்படும் என்று திரு வாலஸ் கூறினார்.
ஆனாலும், 100 முதல் 150 பிரிட்டிஷ் குடிமக்கள் ஆப்கானிஸ்தானிலேயே விட்டுவிடப்படுவதாகவும் அவர்களில் சிலர் அங்கேயே இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆப்கானில் இருக்கும் கடைசி பிரிட்டிஷ் படைகள் எப்போது அங்கிருந்து கிளம்பும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்ற அவர், இருப்பினும் 31ஆம் தேதி அமெரிக்கா தனது படைகளை மீட்டுக்கொள்ளுமுன் அது இடம்பெறும் என்று சொன்னார்.
சிங்கப்பூர் கண்டனம்
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் நடத்தப்பட்ட, வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. "இந்த வன்முறைச் செயல்கள் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. அவற்றுக்கு நியாயம் கற்பிக்க முடியாது," என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கை வாயிலாகக் கூறி இருக்கிறது. தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலையும் காயமுற்றோர் விரைந்து குணமடைய வாழ்த்துகளையும் சிங்கப்பூர் தெரிவித்துக்கொண்டுள்ளது. இதனிடையே, ஆப்கானில் இருந்து வெளியேற விரும்புவோரை மீட்க உதவும் வகையில், 37 டன்னுக்குமேல் எடை தாங்கவல்ல, சிங்கப்பூர் விமானப் படையின் ஏ330 'டேங்கர்' விமானம், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கத்தாருக்குப் புறப்பட்டுச் சென்றது.

