காபூல்: உள்நாட்டுப் போரால் சீரழிந்த ஆப்கானிஸ்தான், இப்போது பெரும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
இம்மாதம் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான் படையினர் வசமானது. ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், அந்நாடு விரைவில் தலிபான் பிடிக்குள் சிக்கியது.
அதன் காரணமாக தங்களது வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்த பல நூறு குடும்பங்கள் தற்போது கொளுத்தும் வெயிலில் காபூல் பூங்காவில் அடைக்கலம் புகுந்துள்ளன. அவர்கள் உண்ண உணவும் வசிக்க இடமும் இன்றி கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருபக்கம், ஆப்கானைவிட்டு வெளியேறும் முயற்சியில் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் திரண்டுள்ளனர். இன்னொரு பக்கம், பூங்காவில் தஞ்சமடைந்துள்ளோரைப் போன்ற குடும்பங்கள் வீடுகளுக்குத் திரும்புவதா அல்லது இப்போதிருக்கும் இடத்திலேயே இருப்பதா எனச் செய்வது அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன.
"மோசமான நிலையில் இருக்கிறேன். என் வயிற்றில் எதுவுமே இல்லை," எனப் புலம்பினார் தனது பெரிய குடும்பத்துடன் காபூல் பூங்காவில் தஞ்சமடைந்து இருக்கும் இல்லத்தரசி ஸாகிதா பீபி.
ஆப்கான் படையினர்க்கும் தலிபான்களுக்கும் இடையிலான போரில் தமது வீடு தீக்கிரையாகிவிட்டதால் குடும்பத்துடன் காபூல் நகருக்குத் தப்பி வந்ததாகக் கூறினார் வடக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திரு பல்வான் சமீர்.
பூங்காவிலும் விமான நிலையத்திலும் இருப்பவர்களுக்கு உணவு வழங்குவதில்லை என்றும் அப்படிச் செய்வது மேலும் கூட்டம் சேர்ப்பதாக அமையும் என்றும் தலிபான் பேச்சாளர் சொன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
அவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அப்பேச்சாளர் வலியுறுத்தினார்.
தனது உறுப்பினர்களை அமைச்சுகளில் நியமித்துள்ள தலிபான், அதிகாரிகளைப் பணிக்குத் திரும்பவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சேவைகள் இன்னும் தொடங்கவில்லை; வங்கிகள் மூடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஆப்கானில் தன்வசம் இன்னும் ஒரு வாரத்திற்குப் போதுமான மருந்துப்பொருள்களே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காபூல் விமான நிலையத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமாக விநியோகம் தடைபட்டுள்ளதாகக் கூறிய அந்த அமைப்பு, அந்நாட்டில் உணவு உதவிக்கு உடனடியாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாகவும் கூறியது.

