ஐந்து அம்சங்களை நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்
புதுடெல்லி: நாடு முழுவதும் சில மாவட்டங்களில் அன்றாட கொரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே, தொற்றுப் பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உள்ளூர் அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களைத் தனிமைப்படுத்தி, தொற்றுப் பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு விழாக்கள் வருவதாகச் சுட்டிக்காட்டி உள்ள உள்துறை, அந்த நேரத்தில் மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
ஆயிரக்கணக்கில் மக்கள் கூடாமல் இருக்க மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவைப்படும் இடங்களில் உள்ளூர் தடை விதிக்க வேண்டும் என்றும் அஜய் பல்லா தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
"முகக் கவசம் அணிவது, கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கைகளை மக்கள் பின்பற்றுவதை தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.
"மேலும், கொரோனா பரிசோதனை, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுவதை உறுதி செய்தல், கொரோனா முன்னெச்சரிக்கைகளைத் தவறாமல் கடைப்பிடித்தல் ஆகிய ஐந்து அம்சங்களை நடைமுறைப்படுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அஜய் பல்லா தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

