திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் புதிய வகை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
'மிஸ்க்' என்ற அந்தப் புதிய நோயால் பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகள் இறந்துவிட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
'மிஸ்க்' நோய் குழந்தைகளைத் தான் அதிகம் தாக்குகிறது என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். அதிலும், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 18 வயதுக்கும் குறைவான பதின்ம வயதினருக்கும் குழந்தைகளுக்கும்தான் பாதிப்பு அதிகம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கேரளாவில் நூற்றுக்கணக்கானோரை பலிவாங்கியுள்ளது கொரோனா தொற்று. இதே காலகட்டத்தில் அம்மாநிலத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 'மிஸ்க்' பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களில் நான்கு குழந்தைகள் பலியாகிவிட்டன. மேலும் 'மிஸ்க்' நோய் தாக்கியவர்களில் சுமார் 95 விழுக்காட்டினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 'மிஸ்க்' நோய்க்கான அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கேரள அரசு துவங்கி உள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் அன்றாட எண்ணிக்கை தொடர்ந்து 30 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது.
கொரோனா, 'மிஸ்க்' மட்டுமல்லாமல் கேரளாவில் ஸிக்கா கிருமி பாதிப்பும் காணப்படுகிறது.
இந்த மும்முனைத் தாக்குதல் அம்மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

