புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கேரள அரசு தோல்வி அடைந்துவிட்டதாக மத்திய அமைச்சர் முரளிதரன் குற்றம்சாட்டி உள்ளார்.
இத்தகைய சூழலில் மக்களைக் குறை கூறாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கேரள அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கேரளாவில் அண்மைய சில தினங்களாக அன்றாட கொரோனா தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேலாகப் பதிவாகி வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய ஆய்வுக்குழு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்குப் பதிலாக கேரள அரசு பொதுமக்களை குற்றம்சாட்ட முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் முரளிதரன் சாடி உள்ளார்.
"வீட்டு தனிமைப்படுத்தல், தொடர்புத் தடமறிதல் போன்றவற்றில் மாநில அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. இதனைக் கண்காணிப்பு அமைப்புகள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளன.
"அப்போதும் கூட நடவடிக்கை எடுக்காத கேரள அரசு இப்போது மக்கள் மீது குற்றம் சாட்டுகிறது. இத்தகைய போக்கை ஏற்க இயலாது. மாநில அரசு இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும்," என்றார் அமைச்சர் முரளிதரன்.

