பெங்களூரு: போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மேலும் ஒரு கன்னட நடிகை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகாவில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் எடுத்து வரும் அதிரடி சோதனை நடவடிக்கைகளில் பலரும் சிக்கி வருகின்றனர்.
பெங்களூரில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அனைவரும் இப்போது சிறையில் உள்ளனர்.
முன்னதாக ஆறு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் போது போலிசாருக்குப் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன.
குறிப்பாக, நைஜீரியாவை சேர்ந்த 31 வயதான தாமஸ் என்பவர்தான் கன்னட திரையுலகத்துடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் மற்ற முக்கிய பிரமுகர்களுக்கும் போதைப்பொருள்கள் விநியோகிப்பது தெரிய வந்தது. அவரும் போலிசாரிடம் சிக்கினார்.
பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் காவல்துறை நேற்று முன்தினம் கன்னட நடிகை சோனியா அகர்வாலின் (தமிழில் நடிப்பவர் அல்ல) பெங்களூரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 40 கிராம் கஞ்சா, மதுப்புட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் தொழிலதிபர் பரத், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வசனா சின்னப்பா ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போதும், கஞ்சா கைப்பற்றப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூவரது வீட்டிலும் போதைப்பொருள் சிக்கியுள்ளதை அடுத்து, எந்த நேரத்திலும் அவர்்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

