புதுடெல்லி: போராட்டங்கள் என்ற பெயரில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, பண்டிகைகளை முன்னிட்டு மக்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றின் மூன்றாவது அலை எந்நேரத்திலும் பரவக்கூடும் என மத்திய அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதைச் சுட்டிக்காட்டி உள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகமாகத் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளதாகக் கூறியுள்ளார்.
"ஒருசிலர் நெருக்கடியான சூழ்நிலையில் யாத்திரைகளை மேற்கொள்கின்றனர். இத்தகைய போக்கு துரதிருஷ்டவசமானது. சாமானிய மக்களின் வாழ்க்கை அசாதாரண சூழலுக்குத் தள்ளப்பட இத்தகைய போக்கும் ஒரு காரணமாகிறது," என்றார் உத்தவ்.
மூன்றாவது அலை நெருக்கடியை எதிர்கொள்ள மாநில அரசுகள் முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் உயிர்வாயு வசதிகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரித்து 416,947ஆக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 10,180இல் இருந்து 1.8 மில்லியனாக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 124,598ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

