புதுடெல்லி: கடந்த சில நாள்களாக தலிபான் அமைப்புடன் முதன்முறையாக அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்தியா தெரிவித்து உள்ளது.
ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களான தலிபானின் வேண்டுகோளுக்கு இணங்க இப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
கத்தாருக்கான இந்தியத் தூதர், கத்தாரில் உள்ள தலிபான் அரசியல் பிரிவுத் தலைவரான ஷெர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாய் உடன் பேச்சு நடத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது.
கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இச்சந்திப்பு நடந்தது.
இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் பயங்கரவாதத்திற்காகவும் எந்த வகையிலும் ஆப்கானை பயன்படுத்தக்கூடாது என்று இந்தியாவின் நிலைப்பாட்டை திரு மிட்டல் எடுத்துரைத்தார். இந்தியா முன்வைத்த விவகாரங்களுக்குச் சாதகமான வழிகளிலும் தீர்வுகாணப்படும் என்று திரு ஸ்டானிக்சாய் உறுதி அளித்ததாகக் கூறப்பட்டது.
"ஆப்கானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் கூடிய விரைவில் இந்தியா திரும்ப வழிவகை செய்வது குறித்தும் பேசப்பட்டது. இந்தியா செல்ல விரும்பும் ஆப்கானியர்களின், குறிப்பாக சிறுபான்மையினரின் பயணம் தொடர்பிலும் பேசப்பட்டது.
பரம எதிரியான பாகிஸ்தானுடன் தலிபான் அணுக்கமான உறவு கொண்டிருப்பது இந்தியா நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் அரசியல், பொருளியல் உறவுகொள்ள தலிபான் விரும்புவதாக திரு ஸ்டானிக்சாய் சில நாள்களுக்குமுன் தெரிவித்து இருந்தார்.
ஆப்கானில் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்தியா மூன்று பில்லியன் அமெரிக்க டாலருக்குமேல் முதலீடு செய்துள்ளது.
இந்தியாவில் ராணுவப் பயிற்சி பெற்ற தலிபான் தலைவர்
இந்தியத் தூதர் தீபக் மிட்டலை கத்தாரில் நேற்று முன்தினம் சந்தித்த தலிபான் தலைவர் ஷெர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாய் (படம்), இந்திய ராணுவத்தின்கீழ் பயிற்சி பெற்றவர். 1979 முதல் 1982 வரை மூன்று ஆண்டுகாலம் நவ்காங்கில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சிப்பாயாகவும் அதன்பின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவப் பயிலகத்தில் அதிகாரியாகவும் இவர் பயிற்சி பெற்றார். சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவரான இவர், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். இவர், முந்தைய தலிபான் ஆட்சியின்போது வெளியுறவுத் துணை அமைச்சராகச் செயல்பட்டார்.

