புதுடெல்லி: நொய்டாவில் விதிமீறிக் கட்டப்பட்டுவரும் இரண்டு 40 மாடிக் குடியிருப்புகளை இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
'சூப்பர்டெக்' நிறுவனத்தின் வீடமைப்புத் திட்டம் ஒன்றில் கூடுதலாகக் கட்டப்பட்ட அக்குடியிருப்புகளில் 950க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. அவை, தீப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளையும் கட்டுமான ஒழுங்குமுறைகளையும் மீறிக் கட்டப்பட்டு உள்ளதாக நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட், எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
இதனால், இன்னும் மூன்று மாதங்களுக்குள் தனது சொந்த செலவில் அந்த அடுக்குமாடி வீடுகளை சூப்பர்டெக் நிறுவனம் இடிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், அந்த இரட்டைக் கோபுரக் குடியிருப்பில் வீடு வாங்கி இருக்கும் அனைவர்க்கும் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 32 மாடிகள் கட்டப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒருவரும் அங்கு குடியேறவில்லை.
'எமரால்டு கோர்ட்' குடியிருப்பாளர்கள் நல்வாழ்வுச் சங்கம், 'சூப்பர்டெக்' நிறுவனத்தின்மீது வழக்கு தொடுத்தது. பசுமைவெளியில் அந்த இரட்டைக் கோபுரங்கள் கட்டப்படுவதாகவும் சூரிய ஒளியும் காற்றும் வராமல் அவை தடுப்பதாகவும் அச்சங்கம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. இவ்வழக்கில் ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அதனை மறுஆய்வு செய்யும்படி கோரவிருப்பதாக 'சூப்பர்டெக்' நிறுவனம் தெரிவித்தது.

