பெங்களூரு: கேரளாவில் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய ஆறு மாநிலங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அறவே கையிருப்பில் இல்லை என்றார் அவர்.
எனினும் அனைத்து மாவட்டங்களிலும் கோவேக்சின் தடுப்பூசிகள் குறைந்தபட்ச அளவு கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இம்மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது கேரள அரசு. எனவே அதிக அளவிலான தடுப்பூசிகள் தேவைப்படுகிறது என அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
"மீண்டும் ஒருமுறை கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை கேரளா எதிர்கொண்டுள்ளது. தடுப்பூசி போடும் நடவடிக்கை தடையின்றி நீடிக்க வேண்டுமெனில் கேரளாவுக்கு கூடுதல் எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் தேவை," என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கேரளாவில் நேற்று முன்தினமும் சுமார் 29 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்றுப்பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு நாளை முதல் நடைபெற இருந்த 11ஆம் வகுப்புக்கான தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் இடைகாலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு வார காலத்துக்கு இந்தத் தடை அமலில் இருக்கும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று முன்தினம் புதிதாக மேலும் 42,618 பேருக்கு கொரோனா தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் 330 பேர் உயிரிழந்துவிட்டனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 440,225 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 36,385 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் தொற்றுக்கு 405,681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சாத்தியமில்லை என்று அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
எனினும் பண்டிகைகளைக் கொண்டாடும்போது கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

