திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த கேரள மாநிலம் போராடி வரும் நிலையில், அங்கு 'நிஃபா' கிருமிப்பரவல் புது அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
அங்கு 12 வயது சிறுவன் 'நிஃபா' கிருமித் தாக்குதலால் உயிரிழந்திருப்பதை அடுத்து நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பழந்தின்னி வௌவால்களின் உமிழ்நீர் மூலம் பரவுகிறது 'நிஃபா' தொற்று. கடந்த 2018ஆம் ஆண்டில் கேரளாவில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது. அச்சமயம் கோழிக்கோடு பகுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்ட 'நிஃபா' கிருமித்தொற்றால் அம்மாநிலத்தில் ஒரு மாதத்துக்குள் 17 பேர் உயிரிழந்தனர்.
அதன் பிறகு மாயமாகி இருந்த 'நிபா' கிருமித்தொற்று, இப்போது மீண்டும் பரவத் தொடங்கி இருப்பது கேரள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
இம்முறையும் கோழிக்கோடு பகுதியில்தான் 'நிஃபா' கிருமி தனது கணக்கைத் துவங்கியுள்ளது. 12 வயதுச் சிறுவன் 'நிஃபா' கிருமித் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த நிலையில், அச்சிறுவனுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்ட 20 பேரைக் கண்காணிப்புக் குழு அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி உள்ளது.
அவர்களில் இருவருக்கு பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அருகிலுள்ள கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களுக்கு நோய்ப்பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு பகுதியில் உள்ள சிறுவனின் வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் பரப்பளவு உள்ள பகுதியை போலிசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிறுவனின் உடல் 12 அடி ஆழத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சிறுவனுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் மேலும் 188 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே, கேரளாவுக்கு நோய்க் கட்டுப்பாட்டு மைய குழு ஒன்றை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு மருத்துவ, தொழில்நுட்ப அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை மாநில அரசுக்கு வழங்குவர்.