திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்த அமைப்பு நேற்று முன்தினம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
விமானத்தை தரையிறக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட இதுவே முதன்மைக் காரணமாக கூறப்பட்டுள்ளது.அதேசமயம் தொழில்நுட்பக் கோளாறும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணியாக இருந்திருக்கலாம் என்றும் அதைப் புறக்கணித்துவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஐக்கிய அரபு சிற்றரசுகளிலிருந்து 191 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. ஓடுபாதையையும் கடந்து சென்று, அதன் முடிவில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் விமானம் இரண்டாக உடைந்தது.
இவ்விபத்தில் இரு விமானிகள் உட்பட 21 பேர் உயிரிழந்துவிட்டனர். 'விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு' இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு இப்போது அறிக்கை அளித்துள்ளது.