பயங்கரவாதச் செயல்பாடுகளை முறியடிப்பதில் மத்திய அரசு தீவிரம்
புதுடெல்லி: பயங்கரவாத செயல்பாடுகளை முன்கூட்டியே முறியடிக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் தேசிய புலனாய்வு வலைப்பின்னல் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து புலனாய்வு அமைப்புகளும் பல்வேறு முக்கிய தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுடன், ஒருங்கிணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். மேலும், மாநில உளவுப்பிரிவுகள் சேகரிக்கும் தகவல்களும் பரவலாகப் பகிரப்படும்.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இந்தியாவுக்குள் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திய இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே புலனாய்வு அமைப்புகள் மத்திய அரசை எச்சரிக்கவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லே தான் மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை தீட்டியுள்ளான். மும்பை மாநகரம் குறித்து அனைத்து முக்கிய தகவல்களையும் தீவிரவாதிகளுக்காகத் திரட்டியதுடன், தாக்குதல் நடத்துவதற்குரிய இடங்களையும் ஹெட்லே தான் தேர்வு செய்ததாகக் கூறப்பட்டது.
கடந்த 2006 முதல் 2009 வரை டேவிட் ஹெட்லே பலமுறை இந்தியாவுக்கு வந்து சென்ற நிலையில், மும்பைத் தாக்குதல் அரங்கேறும் வரை அவன் மீது எந்தவித சந்தேகமும் புலனாய்வு அமைப்புகளுக்கு எழவில்லை. இதனால் புலனாய்வு அமைப்புகளின் கட்டமைப்பை நவீனப்படுத்த வேண்டியது அவசியம் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து தேசிய புலனாய்வு வலைப்பின்னல் ஒன்றை உருவாக்க அப்போதைய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக 2010ஆம் ஆண்டு ரூ.3,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், 2014ஆம் ஆண்டு இதற்கான பணிகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கின. இப்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்றும் கொரோனா நெருக்கடி தலைதூக்காமல் இருந்திருந்தால் முன்பே தேசிய புலனாய்வு வலைப்பின்னலின் சேவை தொடங்கி இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு வலைப்பின்னலில், நாட்டின் அனைத்து குடிமக்கள், வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்கள் என அனைவரது தகவல்களும் இடம்பெற்றிருக்கும். யார், எங்கே உள்ளனர், யாரை எவ்வாறு தொடர்பு கொள்கின்றனர் என அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படும். அவற்றை புலனாய்வு அமைப்புகள், மாநில உளவுப் பிரிவினர் பயன்படுத்தலாம். சந்தேக நபர்கள் மீதான கண்காணிப்பு எளிதாகும்.
மிக விரைவில் இந்த புலனாய்வு வலைப்பின்னலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் புதிய வலைப்பின்னல் தனி நபர் சுதந்திரத்துக்கு பதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்னர்.
தனி நபர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதுடன் அவர்களுடைய தொலைபேசி உரையாடல்களையும் இந்த வலைப்பின்னல் மூலம் ஒட்டுக்கேட்க முடியும் என்பதை ஏற்க இயலாது என அத்தரப்பு தெரிவித்துள்ளது.

