40 மணிநேரம் விடாமல் நீடித்தது: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மின்சாரம் துண்டிப்பு
பெங்களூரு: ஒடிசாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கடந்த 87 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு தினங்களில் மட்டும் அம்மாநிலத்தில் சுமார் 30 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை நிலவரப்படி, அங்கு நாற்பது மணி நேரத்தையும் கடந்து தொடர்ந்து இடைவிடாமல் பெய்த மழையால் அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கரையோரங்களில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை தொடர்பான வெவ்வேறு சம்பவங்களில் இதுவரை மூன்று பேர் பலியாகிவிட்டனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ஒடிசாவின் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோவில் அமைந்துள்ள பூரி மாவட்டத்தில் இதுவரை 34.1 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாநிலம் முழுவதும் தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மாநில மீட்புக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில், 17 இடங்களில் 20 சென்டிமீட்டரும், இரண்டு இடங்களில் 30 சென்டிமீட்டருமாக மழை பதிவாகி உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 15 இடங்களில் 20 முதல் 30 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளதாக ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே.ஜெனா உறுதி செய்துள்ளார்.
திங்கட்கிழமை மாலை வரை சுமார் நான்காயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், அன்று இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.
பைதாரானி, வன்சதரா, ஜலாகா உள்ளிட்ட மூன்று முக்கிய ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவைக் கடந்து ஓடுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள சிறிய ஆறுகள், குளங்கள், குட்டைகள் என அனைத்து நீர் ஆதாரங்களும் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏராளமான கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளதால் பல கிராமங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
ஏராளமான விளை நிலங்களும் மழை நீரில் மூழ்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், ஒடிசாவின் வடக்கு கடலோரப் பகுதியில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்வதாகவும் அடுத்த கட்டமாக வடக்கு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் இடையே அது வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.