புதுடெல்லி: இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை 10 மணியுடன் முடிவடைந்த முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக 25,404 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஒரே நாளில் மேலும் 339 பேர் பலியாகிவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 443,213ஆக கூடியுள்ளது. திங்கட்கிழமை ஒரே நாளில் 37,127 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்றை நிலவரப்படி, நாடு முழுவதும் 362,207 பேர் கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சுமார் 760 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கேரளாவில் தொற்றுப்பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அன்றாட பாதிப்பு குறைவாக இருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை வரையிலான நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக 15,058 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 99 பேர் பலியாகிவிட்டனர்.
மகாராஷ்டிராவில் கடந்த ஏழு மாதங்களில் ஆகக்குறைவாக அன்றாட பாதிப்பு எண்ணிக்கை பதிவானது. திங்கட்கிழமை அங்கு புதிதாக 2,740 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. கடந்த 219 நாள்களில் இதுவே ஆகக்குறைந்த எண்ணிக்கையாகும். மேலும், 190 நாள்களில் ஆகக்குறைவாக 27 கொரோனா இறப்புகள் மட்டுமே பதிவாகின.
இதற்கிடையே, தெலுங்கானாவில் தடுப்பூசி போடும் பணி நடவடிக்கை வேகம் எடுத்துள்ளது. அங்கு நாள்தோறும் 300,000 தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அங்கு 18 வயதைக் கடந்த 28 மில்லியன் பேர் உள்ளனர். இதுவரை 14.2 மில்லியன் பேருக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

