புதுடெல்லி: இந்தியாவில் சென்ற ஆண்டில் தேசவிரோத சக்திகள் 398 வன்செயல்களை அரங்கேற்றியதாக தேசிய குற்றச்செயல் பதிவு இலாகாவின் அறிக்கை தெரிவித்துள்ளது. அவற்றில் 240 சம்பவங்களுக்கு இடசாரி தீவிரவாதிகள் காரணம்.
ஜிஹாத் பயங்கரவாதிகள் 76 வன்செயல்களை அரங்கேற்றினர் என்றும் வடகிழக்குக் கலகக்காரர்கள் 45 வன்செயல்களுக்குப் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதர பயங்கரவாதிகள் 37 சம்பவங்களுக்குக் காரணம் என்று 'இந்தியாவில் குற்றச்செயல்கள்' என்ற தலைப்பிலான அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
சென்ற ஆண்டில் நிகழ்ந்த இத்தகைய சம்பவங்களில் குடிமக்களில் 80 பேர், பாதுகாப்புப் படையினர் 73 பேர் கொல்லப்பட்டதாக அறிக்கையை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தீவிர கம்யூனிஸ்டுகள் 55 பேரும் ஜிஹாத் பயங்கரவாதிகள் 82 பேரும் இதர பயங்கரவாதிகள் 37 பேரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிர கம்யூனிஸ்டுகளில் ஒன்பது பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஹாத் பயங்கரவாதிகள் தொடர்பான 91 வன்செயல்கள் பற்றி பதியப்பட்டன என்றும் அவற்றில் பெரும்பாலானவை ஜம்மு காஷ்மீரில் அரங்கேற்றப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை 2019ல் பதிவான அளவைவிட 35 விழுக்காடு கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவங்களில் 70 வன்செயல் தாக்குதல்கள் போலிஸ் நிலையங்களை அல்லது ராணுவ முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்டன. இடசாரி தீவிரவாதிகளைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டில் மொத்தம் 441 சம்பவங்கள் பற்றி புகார்கள் பதியப்பட்டன.
மொத்தம் 554 மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். அவர்களில் 327 பேர் தாங்களாகவே சரணடைந்தவர்கள் என்று அறிக்கை குறிப்பிட்டது.
சென்ற ஆண்டில் வடகிழக்கு கலகக்காரர்கள் 45 தாக்குதல்களை அரங்கேற்றினார்கள் என்றும் அவர்களில் 46 பேர் பிடிபட்டதாகவும் அறிக்கை தெரிவித்தது.

