புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டில் அன்றாடம் சராசரியாக 77 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெண்கள் பாதிக்கப்பட்ட மொத்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 25,498 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2,655 பேர் சிறுமிகள் என்று அரசு அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், பெண்களுக்கு எதிராக 2020ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி பெண்கள் பாதிக்கப் பட்டதாக கடந்த ஆண்டு மொத்தம் 371,503 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டன.
இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டை (405,236) விட குறைவு ஆகும். கடந்த ஆண்டில் பதியப்பட்ட இத்தகைய மொத்த வழக்குகளில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மட்டுமே 27,046 ஆகும்.
நாளொன்றுக்கு சராசரியாக 77 பாலியல் வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகி இருக்கின்றன.
மாநிலங்களைப் பொறுத்தவரை ராஜஸ்தானில் அதிகபட்சமாக 5,310 பாலியல் வன்கொடுமை வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகி உள்ளன.
அடுத்ததாக உத்தரப் பிரதேசம் (2,769), மத்தியப் பிரதேசம் (2,339), மராட்டியம் (2,061), அசாம் (1,657) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைத் தவிர கணவர் மற்றும் உறவினர்களால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்ட 111,549 சம்பவங்கள் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளததாக சமூக அளவில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

