பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி: நிதி அமைச்சரின் கூட்டத்தில் எதிர்ப்பு
புதுடெல்லி: பெட்ரோலியப் பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 45வது ஜிஎஸ்டி மன்றக் கூட்டம் லக்னோ நகரில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா, "கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஜிஎஸ்டி மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது. பயோ டீசலுக்கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு விநியோகத்திற்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்," என்று அவர் கூறினார்.
13 நாளாக விலை ஏறவில்லை
புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலைகள் ஒவ்வொரு நாளும் கூடி, குறைந்து வந்த நிலையில் நேற்று 13 வது நாளாக பெருநகரங்களான (மெட்ரோ) டெல்லி, மும்பை, சென்னை, கோல்கத்தா ஆகியவற்றில் விலை மாற்றமின்றி தொடர்ந்தது.
சேலையில் முதல்வர் படம்
புதுடெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவத்தை விசைத்தறி இயந்திரம் மூலம் நடிகையும் எம்எல்ஏ வுமான ரோஜா சேலையில் நெய்தார். நகரி நகராட்சி சார்பில் விசைத்தறி இயந்திரம் மூலம் வேலை இல்லாத இளையருக்கு பயிற்சி வழங்கி விசைத்தறி தொழில் திட்டத்தை தொடங்கி வைத்தபோது நெசவு நெய்யும் ரோஜாவின் ஆசை நிறைவேறியது.

