புதுடெல்லி: இந்திய அரசாங்கம் சாலை அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கடந்த ஏழு ஆண்டு காலமாக பெரிய அளவில் விரிவுபடுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக டெல்லிக்கும் மும்பைக்கும் இடையில் ஏறத்தாழ 1,320 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுவரும் தேசிய நெடுஞ்சாலை உலகின் ஆகப் பெரிய விரைவுச் சாலையாகத் திகழுமென தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அந்தச் சாலை கட்டுமானத்தைக் கடந்த சில நாட்களாக பார்வையிட்டு வருகிறார்.
மும்பை-டெல்லி விரைவுப்பாதை பற்றி நேற்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பல விவரங்களைத் தெரிவித்தார்.
"மும்பை-டெல்லி சாலை 2023ல் அமைத்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பொது மக்களுக்குத் திறந்துவிடப்பட்ட பிறகு சாலைக் கட்டண வசூலாக மாதம் ரூ.1,000 கோடி முதல் ரூ.1,500 கோடி வரை அரசுக்குப் பணம் கிடைக்கும்.
"ஏழு சாலைத் திட்டங்கள் பிரம்மாண்ட அளவில் இடம்பெற்று வருகின்றன. அவற்றின் மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு 1.40 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. இப்போது இந்த வருவாய் ரூ. 40,000 கோடியாக இருக்கிறது.
"அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தங்கச் சுரங்கம் போல் அரசுக்குப் பணத்தை அள்ளித் தரும்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மும்பை-டெல்லி எட்டு வழித்தட பாதை டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி அமைக்கப்படுகிறது.
பயண நேரம் பாதியாக- 12 மணி நேரமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை விரிவாக்கத் திட்டத்தின்படி நாள்தோறும் 30 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். டெல்லி-மும்பை விரைவுச்சாலைத் திட்டத்திற்கு 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
அந்தச் சாலை சுமார் 90,000 கோடி ரூபாய் செலவில் அமைகிறது.
50 கிலோமீட்டர் இடைவெளியில் 73 இடங்களில் பயணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய வசதி கள் அமைக்கப்படுகின்றன.

