கொச்சி: கேரள மாநிலம் கொச்சி மாவட்டம், தோப்பும்பாடியில் உள்ள பெண்கள் பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியைகள் அந்த மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
அவர்களின் இந்தச் சமூகப் பணிக்குப் பல்வேறு தரப்பினரும் பெரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
தந்தையை இழந்த ஒரு மாணவிக்காக 2014ஆம் ஆண்டு வீடு கட்டியதில் தொடங்கிய இந்தப் பணி, தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் மாணவிகளுக்காக இதுவரை 150 வீடுகள் கட்டிக் கொடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தேவையான நிதியை நன்கொடை மூலம் ஆசிரியைகள் சேகரிக்கின்றனர்.
ஆசிரியைகளில் ஒருவரான திருவாட்டி லிஸ்சி என்பவர், சொந்த நிலம் இருந்தும் சரியான வீடு இல்லாத தங்கள் மாணவிகளுக்கு நிரந்தர வீடு கட்டுவதற்காக 'ஹவுஸ் சேலஞ்ச்' என்ற திட்டத்தைத் தாங்கள் தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.
"அந்தத் திட்டத்தை தொடங்கிய பிறகு பல குடும்பங்களுக்கு நிலம் இல்லை என்பதை அறிந்தோம்.
"எனவே அவர்களுக்காக நிலத்தையும் இலவசமாகக் கொடுக்கும்படி கேட்டு மக்களை அணுகினோம். ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாசாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு," என்று ஆசிரியை திருவாட்டி லிஸ்சி தெரிவித்தார்.

